பிற்படுத்தப்பட்டோர் ஸ்காலர்ஷிப்-வருமான வரம்பு அதிகரிப்பு
சென்னை: பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை ரூ.1 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. மேலும் சிறுபான்மையின வகுப்பு மாணவர்களுக்கு 3 சதவீத வட்டியில் கல்விக் கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்தார். அதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பொருளாதார சிரமமின்றி கல்வி பெற வசதியாக கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6வது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் இத்தகைய மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் இருந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கான பெற்றோரின் வருமான உச்சவரம்பு ரூ.50,000லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். வரும் கல்வியாண்டில் இருந்து சிறப்புக் கட்டணமும் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் உடனடி வேலை வாய்ப்புக்குரிய 5 ஆண்டுகளுக்கு மிகாத படிப்புகளை படிக்கும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்.
தமிழ்நாடு சிறுபான்மைனர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் 3 சதவீத வட்டியில் கல்விக் கடன் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.