அந்தமானுக்கு தனி மாநில அந்தஸ்து இல்லை!
அந்தமான், நிகோபர் தீவுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அதற்கு தனி மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று அங்கு தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
மேலும் தனி மாநில அந்தஸ்து கோரி போர்ட்பிளேரில் பாஜக எம்பி மனோரஞ்சன் பக்தா, உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார்.
இந்த கோரிக்கை வலுத்து வருவதால் இது குறித்து மத்திய அமைச்சர்கள் குழுவின் ஆய்வுக்கு மத்திய அரசு விட்டுள்ளது.
இந் நிலையில் அந்தமானுக்கு தனி மாநில அந்தஸ்து அளிப்பதில்லை என்ற முடிவில் மத்திய அரசு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவுடன் நில ரீதியாக தொடர்பு இல்லாத அந்தநான் நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பல தீவுகளைக் கொண்ட அந்தமானில் பூர்வீகக் குடி மக்கள், அரியவகை தாவரங்கள், விலங்கினங்கள் உள்ளன.
இதனால் அதை மத்திய அரசே நேரடியாக தனது நிர்வாகத்தில் வைத்திருப்பது தான் சரி என உளவுப் பிரிவினரும் பாதுகாப்புப் படைகளும் தெரிவித்துவிட்டன.
இதனால் அந்தமானுக்கு தனி மாநில அந்தஸ்து தரப்படாது என்றே தெரிகிறது.