அமைச்சர் முன் திமுகவினர் கட்டிப் புரண்டு சண்டை
சென்னை: சென்னையில் நடந்த போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்கும் நிகழ்ச்சியின்போது திமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. உருட்டுக் கட்டைகள், இரும்புக் கம்பிகளுடன் கட்டிப்புரண்டு அவர்கள் சண்டை போட்டதால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது.
சென்னை ராயப்பேட்டை பட்டுலாஸ் சாலை மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனையில், எரிபொருள் பரிசோதனை இயந்திர செயல்பாடு துவக்கம், ஓட்டுநர்களுக்கு பரிசளிப்பு விழா, ஊதிய நிலுவைத் தொகை வழங்கும் விழா ஆகியவை நடந்தது. போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, விழாவில் பங்கேற்றார்.
தி.மு.க. தொழிற்சங்கமான மாநகர ஊழியர் போக்குவரத்துக் கழக முன்னேற்ற சங்கத்தின் இரு கோஷ்டியினர் திரளாக விழாவுக்கு வந்திருந்தனர்.
கடந்த தொழிற்சங்க தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு நடராஜன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த இரு கோஷ்டியினருக்கும் தேர்தல் முன்பகை இருந்து வந்தது.
இதில் செல்வராஜ், அமைச்சர் நேருவின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. ஆனால், விழாவிற்கு வந்த செல்வராஜ் கோஷ்டியை பணிமனைக்குள் விட மறுத்து, வாசல் கதவை எதிர்க் கோஷ்டியினர் மூடி விட்டனர்.
இதனால் இரண்டு கோஷ்டியினருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர் சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அமைச்சர் நேரு வரவே, அவருடன் சேர்ந்து செல்வராஜ் கோஷ்டியினர் பணிமனைக்குள் நுழைந்தனர்.
அமைச்சர் மேடையேறிய அடுத்த நிமிடமே, இரு கோஷ்டியினரும் அடிதடியில் இறங்கினர். உருட்டுக் கட்டை, இரும்புக் கம்பிகளுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கட்டிப்புரண்டு இரு தரப்பினரும் சண்டை போட்டனர்.
இதில் கண்டக்டர் சண்முகம் என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அப்போது செல்வராஜை தாக்க முயன்ற சிலர், அவரது சட்டையைக் கிழித்தனர், இரும்புக் கம்பியைக் கொண்டு முதுகில் அடித்தனர். இதில், அவரது முதுகில் இருந்து ரத்தம் கொட்டியது.
இந்த சம்பவத்தைப் பார்த்த அமைச்சர் நேரு, உடனே மைக் பிடித்து, அனைவரும் உட்காருங்கள் என்று கூறி அமைதிப்படுத்தி, அமர வைத்தார். வேறொருவரின் சட்டையை வாங்கி அணிந்து கொண்டு, விருது பெற வந்திருந்தவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் செல்வராஜும், அவரது கோஷ்டியினரும் அமர்ந்தனர்.
மற்றொரு பக்கத்தில் சங்கத் தலைவர் சபாபதி, செயலர் நடராஜன் உள்ளிட்டோர் அமர்ந்தனர்.
திமுக தொழிற்சங்கத்தினர் மோதிக் கொண்டதால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால், பட்டுலாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரு கோஷ்டியினரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications