கின்னஸ் சாதனைக்காக 1,000 பேர் பங்கேற்கும் மேஜிக் ஷோ
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் வரும் 4ம் தேதி ஆயிரம் மேஜிக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடக்கிறது.
இதுகுறித்து திருவனந்தபுரம் மேஜிக் அகடாமி செயலாளர் கோபிநாத் முத்துகாட் நாகர்கோவில் ஷாஜகான்ஸ் ஜூவல்லர்ஸ்ஸில் நிருபர்களிடம் கூறியதாவது:
திருவனந்தபுரம் மேஜிக் அகடாமி, சுற்றுலா துறை, கேரள மாநில அரசு இணைந்து நடத்தும் உலக நாடுகளிலுள்ள ஆயிரம் மேஜிக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் விஷ்மயம் 2008 என்ற சர்வதேச மேஜிக் திருவிழா திருவனந்தபுரத்தில் 4 நாட்கள் நடக்கிறது.
நேற்று துவங்கிய இந்த நிகழ்ச்சி வரும் 4ம் தேதி நிறைவடைகிறது. முதல் மூன்று நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் திருவனந்தபுரத்தில் நடத்தப்படுகிறது. நான்காவது நாளான 4ம் தேதி காலை 9 மணிக்கு உலக அமைதியை வலியுறுத்தி ஆயிரம் மேஜிக் நிபுணர்களும் ஆயிரம் புறாக்களை வரவழைத்து பறக்கவிடுகின்றனர்.
இந்நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே அந்தோணி துவக்கி வைக்கிறார். அதை தொடர்ந்து ஆயிரம் மேஜிக் நிபுணர்களுக்கும் 20 வாகனங்களில் கன்னியாகுமரி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் பாறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட பின்னர் மாலை 5 மணி அளவில் காந்தி மண்டபம் முன் வெள்ளை துணியில் உலக சமாதானத்தை வலியுறுத்தி கையொழுத்து இடுகின்றனர். இது கின்னஸ் சாதனை முயற்சியாகவும் இருக்கும்.
பின்னர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு சன்செட் பாயிண்ட் அருகே சென்று அங்கு வைத்து மெய்சிலிர்க்க வைக்கும் துப்பாக்கி குண்டை பிடிக்கும் சாகசம் செய்து காண்பிக்கப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிரின்சில் என்ற மாஜிக் கலைஞர் இந்த மேஜிக் நிகழ்ச்சியை செய்கிறார்.
பொதுமக்கள் முன்னிலையில் லோட் செய்யப்பட்ட துப்பாக்கியால் ஒருவர் சுட அதிலிருந்து செல்லும் குண்டை மேஜிக் நிபுணர் தனது கையால் பிடிக்கிறார்.
இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் இவலசமாக பார்க்கலாம். கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சிகளை அமைச்சர் சுரேஷ்ராஜன் துவக்கி வைக்கிறார் என்றார் முத்துக்காட்.
முத்துக்காட்தான் நடிகர் மோகன்லாலுக்கு நெருப்பு சாகசம் குறித்த பயிற்சியை அளித்தவர் என்பது நினைவிருக்கலாம்.