மதுரையில் எச்சிஎல், சத்யம், ஹனிவெல்-திருச்சியில் சுதர்லேண்ட்
மதுரை, திருநெல்வேலி, திருச்சி, காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் ஆகிவயற்றில் எல்காட் நிறுவனம் உருவாக்கியுள்ள சாப்ட்வேர் பூங்காக்களில் தொழில் நிறுவனங்களை அமைக்க முன் வந்துள்ள 8 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணைகளை கருணாநிதி வழங்கினார்.
மதுரையில் எச்.சி.எல்லுக்கு 65 ஏக்கர்:
எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு மதுரை இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 5 ஏக்கர் நிலமும், மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 60 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி-திருநெல்வேலியில் சுதர்லேண்ட்:
சுதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 5 ஏக்கர் நிலமும், திருச்சி நவல்பட்டு தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 10 ஏக்கர் நிலமும், திருநெல்வேலி கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 10 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஹனிவெல்:
மதுரை இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ஹனிவெல் இந்தியா நிறுவனத்திற்கு 5 ஏக்கர் நிலமும், டெசால்வ் சர்வீசஸ் நிறுவனத்திற்கு 2.5 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் சிபி, சுதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ், காக்னிசண்ட் டெக்னாலஜிஸ், ஸ்கோப் இன்டர்நேஷனல் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு மொத்தம் 61.97 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆணைகளை அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம் முதல்வர் வழங்கினார். அப்போது தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் சந்திரமெளலி, எல்காட் மேலாண்மை இயக்குநர் உமாசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.