ஆம்பூர்: காங்- இ.யூ.மு.லீ. கவுன்சிலர்கள் மோதல்
ஆம்பூர்: ஆம்பூர் நகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ்-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பெண் கவுன்சிலர்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர்.
ஆம்பூர் நகரசபையின் சாதாரண கூட்டம் தலைவர் நஜீர் அகமது தலைமையில் நடந்தது.
அப்போது பேசிய அதிமுக, பாஜக கவுன்சிலர்கள், ஆம்பூரில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் உடல் கருகினர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது டாக்டர் பணியில் இல்லை. அவரை தேடி அவரது கிளினிக்கிற்கு சென்று அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. அதற்குள் அந்த பெண்கள் இறந்துவிட்டனர்.
அரசு மருத்துவமனையை கண்டித்து ஒட்டுமொத்தமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கூடுதல் டாக்டர்களை நியமிக்க அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அந்த பெண்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க காவல்துறையிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றனர்.
அப்போது திடீரென்று எழுந்த காங்கிரஸ் கவுன்சிலர் யுவராஜ், ரெட்டி தோப்பு பகுதிக்கு உட்பட்ட 4 வார்டு பகுதி மக்கள் மழைக் காலங்களில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மேம்பாலம் அமைக்ககோரி பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அப்போது பொறுப்பில் இருந்தவர்கள் வந்து பார்த்தார்கள். தற்போது வாணியம்பாடி எம்எல்ஏ அப்துல்பாசித்தும் பார்வையிட்டு சென்றார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கவுன்சிலர் பிலால் குறுக்கிட்டு, எம்எல்ஏ பணி செய்து கொண்டுதான் இருக்கிறார். அவரை எப்படி குறை கூறலாம் என்று வாக்குவாதம் செய்தார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. தகாத வார்த்தைதகளால் திட்டிக் கொண்டனர்.
டேபிள் மீது ஏறி இருவரும் சண்டை போட்டனர். அவர்களை மற்ற கவுன்சிலர்கள் சமரசம் செய்ய முயன்றனர். அப்போது வெளியே கூடியிருந்த சிலர் நகராட்சி கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து எம்எல்ஏவை எப்படி குறை சொல்லலாம் என்று கூறி பிலாலுக்கு ஆதரவாக பேசி தகராறு செய்தனர். ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.
இதைப் பார்த்து பயந்துபோன பெண் கவுன்சிலர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். அறைக்குள் அத்துமீறி நுழைந்தவர்களை ஆணையாளர் மணிகண்டன், நகராட்சி பணியாளர்கள் வெளியேற்றினர். நகரசபை தலைவர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் கூட்டம் முடிந்துவிட்டதாக கூறி தலைவர் நஜீர்அகமது தனது அறைக்கு சென்று விட்டார்.
இதுபோன்று அமளியில் ஈடுபடும் கவுன்சிலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications