சங்ககிரி: கேரளா-பெங்களூர் ரயிலின் என்ஜினில் தீ!
சென்னை: கேரளத்தில் இருந்து யஷ்வந்த்பூர் (பெங்களூர் அருகே உள்ளது) ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த ரயிலின் என்ஜினில் தீப் பிடித்தது. இதையடு்த்து பயணிகள் இடையே பெரும் பீதி பரவியது.
சேலம் அருகே சங்ககிரியில் நேற்றிரவு இச் சம்பவம் நடந்தது.
சங்ககிரியை அந்த ரயில் அடைந்தவுடன் திடீரென என்ஜினில் பெரும் வெடிச் சத்தம் கேட்டது. அடுத்த நொடியே என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டது.
இதைக் கேட்டு பயணிகள் அலறினர். என்ஜினியில் தீப் பிடித்துவிட்டதைப் பார்த்தவர்கள் அதை மற்ற பணிகளுக்கு தெரிவிக்கவே பெரும் அச்சமும் பீதியும் பரவியது.
இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. என்ஜின் தனியாக பிரிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக பயணிகள் அனைவரும் ரயிலிலிருந்து இறக்கப்பட்டனர்.
தீயணைப்புப் படையினர் வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
புதிய என்ஜின் கொண்டு வரப்பட்டு அந்த ரயில் 3 மணி நேர தாமதத்துக்குப் பின் கிளம்பிச் சென்றது. இந்த சம்பவத்தால் அந்த வழியாக சென்ற 14 ரயில்களும் தாமதமாயின.