ஹஜ் புனிதப் பயணம்- விண்ணப்பங்கள் வினியோகம்
சென்னை: இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் ஹஜ் கமிட்டியிடம் மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசின் அறிவிப்பில், இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழக முஸ்லிம்கள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவில் விண்ணப்பிக்கலாம்.
புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை), ரோஸி டவர், 3ம் தளம் என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெறலாம்.
சென்னையில் மாற்றக்கூடிய வகையில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு பெயரில் ரூ.100கான டிடி, கொடுத்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
தபால் மூலமும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் கோரும் கோரிக்கைகளை, விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100 வீதம் டிடி எடுத்து சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு குழு, உறையில் 6 விண்ணப்பங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள், போட்டோக்கள் மற்றும் நபர் ஒன்றுக்கு, அந்நிய செலாவணி முன்பணம் மற்றும் பலவகை கட்டணங்களுக்காக ரூ.10,700 தொகையை பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்பு கணக்கு எண்.30361856116ல் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் மாநில ஹஜ் குழுவில் மே 31ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.