பணவீக்கம் 7.57%-அரசு மீது நம்பிக்கை வையுங்கள்-சிதம்பரம்
டெல்லி: நாட்டின் பணவீக்கம் 7.57 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆனால், பீதியடைய வேண்டாம். அரசு மீது நம்பிக்கை வையுங்கள், விலைவாசி நிச்சயம் குறையும் என்று கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
நாட்டின் பணவீக்க விகிதம் கடந்த ஏப்ரல் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய வாரத்தில் பணவீக்கம் விகிதம் 7.33 சதவீதமாக இருந்தது.
கடந்த 42 மாதங்களுக்கு பிறகு பணவீக்கம் இந்த அளவை எட்டியுள்ளது. அரிசி, பால், தேயிலை, காய்கறிகள் உள்ளிட்ட அத்யாவிசய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒட்டுமொத்த விலைப் புள்ளி 6.07 சதவீதமாக இருந்தது.
இதற்கு முன் கடந்த 2.11.2004ல் பணவீக்கம் 7.76 சதவீதத்தை தொட்டது.
இதனால் தேயிலையில் ஆரம்பித்து பால், அரிசி, காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இரும்பு, உருக்கு பொருட்களின் விலை 51 சதவீதமும் உயர்ந்துள்ளது. இரும்பு தகடுகளின் விலை 2 சதவீதமும், தேனிரும்பின் விலை 8 சதவீதமும் உயர்ந்துள்ளது.
விலை உயர்வை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடந்த 2 வாரங்களில் பல்வேறு நிதி சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கை கடந்த 29ம் தேதி வெளியானது. அதன் பலன் மே 10ம் தேதி வாக்கில் தெரியவரும் என்று ஆர்பிஐ கவர்னர் ஒய்.வேணுகோபால் ரெட்டி தெரிவித்தார்.
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பாசுமதி அல்லாத பிற ரக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஏறுமுகத்தில் செல்லும் பணவீக்க விகிதம் பல்வேறு தரப்பையும் கவலையடையச் செய்துள்ளது.
இந் நிலையில் பெங்களூரில் நடந்த கர்நாடக மாநில தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு விழாவில் பேசிய நிதியமைச்சர் சிதம்பரம் பேசுகையில்,
பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பது கவலை அளிக்கிறது. சர்வதேச அளவிலான பொருளாதார மாற்றங்களால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. 154 லட்சம் டன் கோதுமையும், 230 லட்சம் டன் அரிசியும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. மக்கள் அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.