தரங்கெட்ட விஜயகாந்த்-சரத்குமார் 'வசைப்பாட்டு'
சென்னை: விஜயகாந்திற்கு பண்பு தெரியவில்லை. அவரது தேமுதிக தமிழகத்தில் மாற்றுக் கட்சியாக வர முடியாது என அஇசமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதல் மே தின பொதுக்கூட்டம் சென்னை தங்க சாலையில் நடந்தது.
அதில் சரத்குமார் பேசியதாவது:
காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சோனியா பேசும்போது, தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்றார். அப்படியென்றால் நம் கட்சிக்குதான் ஆதரவு என்று சொல்கிறார்.
எங்கள் கட்சி ஆரம்பித்த ஒன்பது மாதங்களில் தமிழகம் மாற்றத்தை நோக்கி செல்கிறது.
விஜயகாந்த் கேள்வி கேட்டால் முதல்வர் பதிலளிக்கிறார், நீங்கள் கேட்டால் பதிலளிப்பதில்லையே என்று கேட்கின்றனர். நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முதல்வருக்கு தெரியவில்லை.
விளம்பர பேனர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றேன். உடனே, சென்னையில் இருக்கும் விளம்பரப் பலகைகள் அனைத்தையும் அகற்றிவிட்டனர். போர்டுகளை அகற்றக் கூடாது என பல அமைச்சர்களுக்குள் கடும் வாக்குவாதமே நடந்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலே அராஜகம், வன்முறை தலைவிரித்தாடுவது வழக்கமாகிவிட்டது. தமிழகத்தில் 40 ஆண்டு காலம் இரு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்கின்றன.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது மாற்றுக் கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். பண்பாக, நாகரீகமாக எதைப் பற்றி பேச வேண்டும் என்பது கூட தெரியாமல் என்னையும், எங்கள் கட்சியையும் கீழ்த்தரமாக பேசுவதுதான் அரசியலா?.
தரங்கெட்டு பேசும் விஜயகாந்தின் பண்பில்லாத அரசியலால் அவரது கட்சி ஒரு போதும் மாற்றுக் கட்சியாக வரவே முடியாது.
ஓகேனக்கல் திட்டத்திற்கு திரையுலகம் உண்ணாவிரதம் இருந்தபோது மதியம் வந்தார் விஜய்காந்த். பேசும்போது சட்டசபையில் குடிநீர் திட்டத்திற்காக குரல் கொடுத்தேன் என்றார். அதற்காகதானே உங்களை சட்டசபைக்கு அனுப்பினோம். சட்டசபையில் நீங்கள் குரலே கொடுப்பதில்லை என்று எங்களுக்கு தெரியாதா?
நாம் ஏன் திமுக, அதிமுகவோடு கூட்டணி வைக்க கூடாது என்று கேட்கிறார்கள். 40 ஆண்டு காலம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று பேசிவிட்டு, அவர்களோடு கூட்டணி வைத்தால், நம்மை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? நாங்கள் 2011ல் ஆட்சி அமைப்போம்.
அப்போது, எங்கள் கட்சி எம்எல்ஏ தொகுதி பக்கம் எட்டி பார்க்கவில்லை என்றால் மக்களே அவர்களை திரும்ப பெறும் சட்டத்தை கொண்டு வருவோம்.
வரும் பார்லிமென்ட் தேர்தலில் 40 தொகுதியிலும் சமத்துவ மக்கள் கட்சி வெற்றி பெறும் என்றார் சரத்குமார்.
தாங்கலையே.. சாமி...