உத்தமபுரம் தீண்டாமைச் சுவர் இடிப்பு - பேச்சுவார்த்தை தோல்வி
மதுரை: மதுரை அருகே உள்ள உத்தமபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை இடிப்பது தொடர்பாக நடந்த சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ளது உத்தமபுரம் கிராமம். இங்கு 1989ம் ஆண்டு பெரும் ஜாதிக் கலவரம் ஏற்பட்டது. இதில், 8 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தலித் மக்களும், பிற சமூகத்தினரும் பிரித்து வைக்கப்பட்டனர் - ஒரு சுற்றுச் சுவரால்.
ஜாதி துவேஷத்தை வளர்க்கும் இந்தச் சுவரை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக அங்கு எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி சிலர் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். இதனால் மீண்டும் ஜாதிக் கலவரம் ஏற்படுமோ என்ற பீதி அங்கு எழுந்துள்ளது.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கோட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஒரு தரப்பு திடீரென வெளிநடப்பு செய்தது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications