கருணாநிதி பச்சை துரோகம்-வைகோ தாக்கு
சென்னை: ஓகேனக்கல் பிரச்சனையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களின் உரிமையை விட்டு கொடுத்து பச்சை துரோகம் செய்துள்ளார் கருணாநிதி என மதிமு பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
மே தினத்தையொட்டி ஆவடியில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில் நடந்த மாநாட்டில் வைகோ பேசுகையில்,
தமிழகத்தில் 1967ம் ஆண்டு முதல்வராக இருந்த அண்ணாதுரை, கோவை வ.உ.சி. பூங்காவில் நடத்திய அரசு விழாவில் மே தின விடுமுறை அறிவித்தார்.
அதை மறைத்து விட்டு முதல்வர் கருணாநிதி ஏதேதோ சாதனைகள் குறித்து தனது மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஓகேனக்கல் பிரச்சனையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களின் உரிமையை விட்டு கொடுத்து பச்சை துரோகம் செய்துள்ளார் கருணாநிதி.
இலங்கையில் இரண்டாண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி வாடி உயிரிழந்து வருகின்றனர். அதற்காக நான் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி, செஞ்சிலுவை சங்கம் மூலமாக சேகரித்து வைத்துள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இலங்கை தமிழர்களுக்கு அனுப்பக் கோரினேன். உடனே அவரும் தனது செயலரை அழைத்து உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பாமல் தடுத்து நிறுத்தியது யார்?
விரைவில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
இதே சென்னை ஆவடியில் மாநாடு நடத்தி சோஷலிச கொள்கைக்கு வித்திட்ட காங்கிரஸ், இன்று அதை மறந்து விட்டு ஆட்சியில் இருந்தால் போதும் என்ற நிலையில் உள்ளது.
கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்து வெற்றி பெற்று விட்டோம். இனி நமக்கு தொடர்ந்து வசந்த காலம் தான். அதிமுகவுடன் இணைந்து விரைவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி காட்டுவோம் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications