ஹில்லாரிக்கு ஆதரவு பெருகுகிறது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் திடீரென ஹில்லாரிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் ஓபாமா அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் தேர்வாகி விட்டார். ஆனால் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் யார் என்பதில்தான் பெரும் இழுபறி நிலவுகிறது.
இக்கட்சியின் சார்பில் களத்தில் நிற்கும் பாரக் ஓபாமாவுக்கும், ஹில்லாரி கிளிண்டனுக்கும் இடையே பெரும் இழுபறி காணப்படுகிறது.
இருவரும் மாறி மாறி வெற்றிகளைத் தட்டிச் சென்று கொண்டிருப்பதால், யார் வேட்பாளராக வருவார் என்பதில் உறுதியான நிலை இல்லை. வாக்குகள் எண்ணிக்கையிலும், வெற்றிகள் எண்ணிக்கையிலும் பாரக் ஓபாமாதான் தற்போதைக்கு முன்னணியில் இருக்கிறார்.
ஆனால் தற்போது ஹில்லாரிக்கு ஆதரவாக அலை வீச ஆரம்பித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே மீதம் உள்ள மாகாணங்களில் ஹில்லாரிக்கு கணிசமான வெற்றிகள் கிடைக்கக் கூடும் என்று தெரிகிறது. இது நிச்சயம் ஓபாமாவுக்கு பின்னடைவைக் கொடுக்கும் என்று அமெரிக்க தேர்தல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹில்லாரி தனக்கு சிக்கலைக் கொடுத்த விஷயங்களை அடையாளம் கொண்டு அதை சரி செய்து வருகிறார். தனது தேர்தல் மேனேஜர்களையும் அவர் அதிரடியாக நீக்கி சரியான ஆட்களை அந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளார். எனவே ஹில்லாரிக்கு இப்போது ஆதரவு அலை வீச ஆரம்பித்துள்ளது.
எனவே இனி வரும் மாகாண வாக்கெடுப்பில் ஹில்லாரிக்கும், ஓபாமாவுக்கும் இடையே நிச்சயம் கடும் போட்டி நிலவும். ஹில்லாரிக்கு கணிசமான வெற்றிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.