4 மலையாள நாளிதழ்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடை
துபாய்: மலையாள மனோரமா, மத்யமம் உள்ளிட்ட நான்கு மலையாள தினசரிள் மற்றும் 2 உருது தினசரிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அச்சிட்டு பிரசுரிக்க அமீரக அரசு தடை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மலையாள மனோரமா, மத்யமம், சந்திரிகா, சீரஜ் ஆகிய நான்கு மலையாள தினசரிகள் வெளியாகின்றன. அதேபோல சில உருது இதழ்களும் வெளியாகி வருகின்றன.
ஆனால் இவற்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அச்சிட்டுப் பிரசுரிக்க உரிமம் தரப்படவில்லை. இதையடுத்து இந்தப் பத்திரிகைகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்தது. உரிய முறையில் உரிமம் பெற்று பிரசுரிக்குமாறு கூறி அதற்கு கால அவகாசமும் தரப்பட்டது.
ஆனால் மேற்கண்ட பத்திரிகைககள் அதுபோல செய்யவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து மலையாள மனோரமா உள்ளிட்ட நான்கு மலையாள தினசரிகள், ஒரு உருது தினசரி, ஒரு உருது வார இதழ் ஆகியவற்றை அச்சிட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தடை விதித்தது.
அந்தப் பத்திரிகைகள் அல் குராயார் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வருகின்றன. இனிமேல் இவற்றை அச்சிடக் கூடாது என அந்த அச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் இந்த இதழ்களை அச்சிடுவது நிறுத்தப்பட்டு விட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இந்த இதழ்கள் மீது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்கு அச்சிட அவர்களுக்கு உரிமம் தரப்படவில்லை. அதுதான் ஒரே பிரச்சினை என்று தெரிவித்தனர்.