விைரவில் மகளிர் மசோதா நிறைவேறும்: மன்மோகன் சிங்
டெல்லி: நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படும். இதுதொடர்பான நடைமுறைகள் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாக சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான் கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 1996ம் ஆண்டு முதல் கூறப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும்போதும் இந்த தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படும்.
ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் சூடு பிடித்துள்ளது.
மசோதாவை நிறைவேற்ற எந்த நிபந்தனையுமின்றி ஆதரவு தருவதாக பாஜக ஏற்கனவே கூறியுள்ளது. மசோதாவை உடனே நிறைவேற்றும்படி இடதுசாரிகளும் வலியுறுத்தி வருகின்றன.
தற்போது நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்டம் நடந்து வருகிறது. 9ம் தேதி கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஏ.பி.பர்தான், செயலாளர் டி.ராஜா மற்றும் குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோர் பிரதமரை நேற்று சந்தித்தனர்.
பின்னர் பர்தான் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நடப்பு கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்றும் அதற்கான நடைமுறைகளை நாளை (இன்று) நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் தெரிவித்தார் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications