கல் குவாரியில் வெடிவிபத்து - ஒருவர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கல் உடைக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே எலம்பலூர் - தன்னீர்பந்தல் கிராமத்தில் இன்று அதிகாலையில் இச்சம்பவம் நடந்தது. அங்குள்ள கல் உடைக்கும் தொழிற்சாலையில், இளையராஜா (25) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இளையராஜாவும், கல் உடைக்கும் நிறுவனத்தின் மேலாளர் முருகனும், அங்குள்ள அலுவலக அறையில் நேற்று இரவு தங்கினர். இன்று காலை அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
பாறைகளை உடைக்க வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இவர்களில் இளையராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தில் அவர்கள் இருவரும் தங்கியிருந்து கீற்றுக் கொட்டகை அலுவலகம் முழுவதும் தீக்கிரையாகி விட்டது. விபத்தில் படுகாயமடைந்த முருகன் மிகவும் ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த கல் உடைக்கும் தொழிற்சாலையை அதன் உரிமையாளர் தனபால் உரிமம் இல்லாமல் நடத்தி வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications