கொலை வழக்கில் விடுதலை - ரிலீஸ் ஆகாமல் தவிக்கும் தமிழர்
துபாய்: கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும் கூட, பஹ்ரைன் சிறையிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் தமிழர் ஒருவர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. பஹ்ரைனில் வேலை பார்த்து வருகிறார். 41 வயதாகும் சாமிக்கண்ணு, கடந்த 2006ம் ஆண்டு ஒரு இந்தியப் பெண் பிணமாகக் கிடந்தது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
ஆனால் போலீஸார், சாமிக்கண்ணுதான் அப்பெண்ணைக் கொலை செய்ததாக கூறி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். கடந்த ஆண்டு மே மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிைலயில் சாமிக்கண்ணு சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. அதை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த கிரிமினல் வழக்குகளுக்கான அப்பீல் கோர்ட், சாமிக்கண்ணு நிரபராதி என தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் விடுதலை ஆகும் நிலை ஏற்பட்டது. ஆனால் இதுவரை சாமிக்கண்ணு விடுதலை செய்யப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்குக் காரணம் பஹ்ரைன் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதுதான் என்று அரசுத் தரப்பு கூறுகிறது. இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்றே தெரியவில்லை. விசாரணைக்கு வழக்கு எடுத்துக் கொள்ள 3 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக அப்பீல் மனுவில் வெற்றி பெற்றும் கூட விடுதலை ஆக முடியாமல் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் சாமிக்கண்ணு.












Click it and Unblock the Notifications