மதுரையில் அப்பள வியாபாரி கத்தியால் குத்திக் கொலை
மதுரை: மதுரையில் பணத்தைப் பறிக்க முயன்ற கும்பலிடமிருந்து தப்ப முயன்ற அப்பள வியாபாரியை, அக்கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு பணப் பையுடன் தப்பிச் சென்றது.
மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் மதிமோகன் (48). அப்பள வியாபாரி. கும்பகோணம் சென்ற இவர், அங்குள்ள டீலர்களிடம் பணத்தை வசூலித்துக் கொண்டு மதுரை திரும்பினார்.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து தெற்குவாசலுக்கு ஆட்டோவில் வந்தார். வழியில் திடீரென ஒரு கும்பல் வழிமறித்தது. ஆட்டோ டிரைவரும் அந்தக் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டார். ஆட்டோவை காந்தி மியூசியம் அருகே உள்ள புதர்கள் நிறைந்த பகுதிக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து மதிமோகன் வைத்திருந்த ரூ.85 ஆயிரம் பணம் அடங்கிய பையைப் பறிக்க முயன்றனர். ஆனால் அதை கொடுக்க மதிமோகன் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினர்.
கழுத்து, நெஞ்சு, வயிற்றில் கத்திக் குத்துக் காயம் பட்ட மதிமோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மாநகராட்சி ஆணையர் வீடு அருகே உடலைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது அக்கும்பல்.
போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலைக் கும்பலைத் தேடி வருகின்றனர்.