அதிக மாணவர் சேர்க்கை-மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
சென்னை: மெட்ரிகுலேசன் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அவர் அளித்த பதில்:
எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைகளைக் கூட சில பள்ளிகளில் பெயில் ஆக்குவதாக உறுப்பினர்கள் கூறினர்.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளை பெயில் ஆக்க கூடாது என்று சட்டம் உள்ளது. அவ்வாறு பெயிலாக்கினால் அவர்களது மன பலம் பாதிக்கப்படும்.
தமிழக அரசின் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் பள்ளிகளில் இது போன்ற குறைபாடுகள் இருந்தால் உடனடியாக அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அரசின் அனுமதி பெறப்பட வேண்டும். சில பள்ளிகளில் குறிப்பிட்ட அளவு மாணவர்களை சேர்க்க அனுமதி பெற்று விட்டு அனுமதி பெறாமல் புதிய கிளைகளை தொடங்கி அதிக மாணவர்களை சேர்ப்பதாக இங்கு குற்றம் சாட்டப்பட்டது.
விதிமுறைகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். பள்ளிக்கான அனுமதி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications