ஐடி பார்க்கில் ரியல் எஸ்டேட் தொழில்-ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ராமதாஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாக இரு தினங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி கடுமையாக தாக்கியிருந்தார்.
இந் நிலையில் பாட்டாளி தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின பொதுக்கூட்டம் சென்னை அமிஞ்சிக்கரை புல்லாரெட்டி திடலில் நடந்தது. அதில் ராமதாஸ் பேசியதாவது:
தனியார் மயம், தாராள மயம், உலக மயம் ஆன பிறகு புதுப்புது சுரண்டல்கள் நடக்கின்றன. இந்த சுரண்டல்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். நம் நாடு, நம் மக்கள் என்ற எண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். இந்த எண்ணம் தொழிலாளர்களிடம் உள் ளது. ஆனால் அதிகாரிகளிடம் இல்லை.
பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் நமது வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள்.
அரசின் திட்டங்களுக்கு பா.ம.க. முட்டுக்கட்டை போடுவதாக திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இளைஞர்களுக்கு, போக்குவரத்து நெரிசலுக்கு, வேளாண் அபிவிருத்திக்கு பல திட்டங்களை தந்தோம். அதில் என்ன குறை கண்டீர்கள். இது குற்றச்சாட்டு அல்ல. தொடர்ந்து நாங்கள் சொல்லி வரும் ஆலோசனை.
5,000 குடும்பங்களை காலி செய்து விட்டு விமான நிலையத்தை விரிவாக்க வேண்டாம் என்றேன். 144 கிராமங்களை காலி செய்து துணை நகரம் வேண்டாம் என்றேன். விளைநிலங்களை அழித்து சிறப்பு பொரளாதார மண்டலம் வேண்டாம் என்றேன்.
இந்த திட்டங்களுக்கு மாற்று இடங்களையும் தெரிவித்தோம். அதை ஏன் பரிசிலீக்கவில்லை. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்ற புள்ளி விபரத்தை சொல்லுங்கள்.
தரமணியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க 25 ஏக்கர் நிலத்தை உலக கோடீசுவரர்களில் ஒருவரான பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு கொடுத்தது ஏன்?.
தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ஸ்டார் ஓட்டல்கள், சொகுசு வீடுகள் கட்டப்படுவது ஏன்? மறைமுகமாக ரியல் எஸ்டேட் தொழில் நடக்கிறது. இதைத் தான் நான் எதிர்க்கிறேன்.
பொறுப்புள்ள கட்சியாக இருந்து ஆலோசனை சொல்கிறோம். நல்லது செய்தால் ஆதரிப்போம், முட்டுக்கட்டையாக இருக்க மாட்டோம் என்றார் ராமதாஸ்.