சொத்துக்காக பெண் அடித்துக் கொலை-உறவினர் உள்பட 4 பேர் கைது
சென்னை: சொத்துக்காக அத்தையை அடித்து கொலை செய்த வாலிபரையும், கூலிப் படையினரையும் போலீசார் 7 மணிநேரத்தில் கைது செய்தனர்.
சென்னை பூங்கா நகர் ரகுநாயக்கலு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் சாந்தி தேவி (57). இவரது கணவர் பவர்லால் ஜெயின், 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். சாந்தி தேவி தனியாக வசித்து வந்தார்.
இவருக்கு வாரிசு இல்லாததால், பலகோடி மதிப்பு சொத்துக்களை உறவினர்களுக்கு பிரித்து கொடுக்க திட்டமிட்டிருந்தார்.
இந் நிலையில் சாந்திதேவியை சந்திக்க அவரது கணவரின் தம்பி தேவிசந்த் நேற்று இரவு 8 மணிக்கு வந்தார். அப்போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சமையலறையில் சாந்திதேவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தேவிசந்த் வடசென்னை இணை கமிஷனர் ரவி, துணை கமிஷனர் சம்பத் ஆகியோருக்கு தகவல் தந்தார். அவர்கள் விரைந்து வந்து விசாரித்தனர்.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு சாந்தி தேவியின் வீட்டிற்கு சிலர் வந்து சென்றதாக குடியிருப்பு வாட்ச்மேன் தெரிவித்தார். இதையடுத்து அமைக்கப்பட்ட 7 தனிப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
விசாரணையில் சாந்திதேவியின் சொத்துக்களை பெறுவதில் உறவினர்களுக்கிடையே போட்டா போட்டி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சாந்தி தேவியின் தம்பி மகன் அமீத்குமார் (20) கூலிப் படையுடன் சென்று சாந்திதேவியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இன்று அதிகாலை 3 மணி அளவில் மின்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் பதுங்கி இருந்த அமீத்குமார், கூலிப்படையினர் பிரகாஷ் (23), சேட்டன் (24), பணம் கொடுத்து உதவிய ராஜேஷ் (26) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அமீத்குமாரிடம் நடத்திய விசாரணையில் என் பெயரில் சொத்துக்களை எழுதி தருமாறு அத்தை சாந்தி தேவியிடம் பலமுறை கேட்டேன். ஆனால் அவர் மறுத்தார். இதையடுத்து கூலிப்படையுடன் சென்றேன். பால் காய்ச்சிக் கொண்டிருந்த அத்தையின் வாயை பொத்தி, கைகளை கட்டிப்போட்டு கையெழுத்து போடும்படி மிரட்டினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதனால் அவரை அடித்து கொலை செய்தோம் என்றார்.
சாந்தி தேவியின் வீட்டில் இருந்து இந்தக் கும்பல் அள்ளிச் சென்ற 13 பவன் நகைகளும் ரூ.21,000ம் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை குறித்த தகவலறிந்த 7 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை கமிஷனர் நாஞ்சில் குமரன் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications