கொடைக்கானல் ஏரி- ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஏரியை சுற்றியிருந்த ஆக்ரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.
கோடையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதையடுத்து அங்கு பல அதிரடி நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.
கொடைக்கானல் ஏரி பகுதியில் நகராட்சி சார்பில் 100 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் பல வெளி வியாபாரிகள் ஏரிக்கு செல்லும் பாதையை ஆக்கிரத்து கடைகளை நடத்தி வருகின்றனர். தவிர நடைபாதை கடைகளும் அதிகளவில் முளைத்துள்ளன.
இதனால் ஏரிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் ஏரிப்பகுதியில் நிலவும் சுகாதாரக் சீர்கேடுகள் குறித்தும் சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர்.
புகார்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்ந்து வந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வாசுகி நடைபாதை கடைகளை உடனே அகற்ற கொடைக்கானல் நகராட்சிக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நகரசபை ஆணையர் சாந்தி, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் மேற்பார்வையில் ஏரியை சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்ட ஆக்ரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன.