கீழக்கரை: வேன் டிரைவருக்கு அடி-பஸ் மீது தாக்குதல்
ராமநாதபுரம்: கீழக்கரையில் வேன் டிரைவர் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டதை கண்டித்து பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் மருதந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன், வேன் டிரைவர். கடற்கரை கிராமமான கீழக்கரையைச் சேர்ந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயமுருகனை நேற்று முன்தினம் மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்தனர்.
இதில் ஜெயமுருகன் படுகாயமடைந்தார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்தும், ஜெயமுருகனை தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து சமரசம் செய்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஜெயமுருகனை தாக்கியவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. பஸ் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. ஆட்டோ, பஸ் போக்குவரத்து நிறுப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது












Click it and Unblock the Notifications