டெல்லியில் காரத்துடன் விஜய்காந்த் சந்திப்பு
தேமுதிக கிளை அலுவலகத்தை திறந்து வைக்க டெல்லிக்கு சென்ற அக்கட்சித் தலைவர் நடிகர் விஜயகாந்த் அங்கு தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்கத் தொடங்கியுள்ளார்.
நேற்று மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தை சந்தித்தார். சுமார் அரைமணிநேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உருவாகப் போகும் 3வது அணியில் விஜயகாந்த் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறுகையில், இடதுசாரி கொள்கைகள் மீது எனக்கு எப்போதுமே பிடிப்பு உண்டு. எனது திரைப்படங்களில்கூட கம்யூனிஸத்துக்கு ஆதரவாக வசனம் பேசியுள்ளேன். காரத்தை சந்தித்து பேசியதும் அதற்கு காரணமாகும்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். வேறு எந்த அரசியல் விவகாரமும் இல்லை.
காங்கிரஸ் தலைவர்களையும் நான் சந்திக்க ஆவலாக இருக்கின்றேன். ஆனால் அவர்கள் என்னை சந்திக்கத் தயாராக இல்லை. அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை நினைத்து பயப்படுகின்றனர்.
நான் இதற்கு முன் எந்த காங்கிரஸ் தலைவருடனும் கூட்டணி பற்றி பேச்சு நடத்தவில்லை. ஆனால் காங்கிரஸின் தமிழக பார்வையாளர் அருண்குமார் தானாகவே, எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார் எனறார்.