இலங்கைக்கு 'ஐலண்ட் பிரே'க் சுற்றுலா பேக்கேஜ் அறிமுகம்
மும்பை: இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 'ஐலண்ட் பிரேக்' என்ற சுற்றுலாத் திட்டத்தை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளை கவர சலுகை அறிவிப்புகள் தொடங்கியுள்ளன. குறைந்த கட்டணம் மற்றும் சலுகைகள் கொண்ட ஐலண்ட் பிரேக் என்ற சுற்றுலா திட்டத்தை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்ரீலங்கா சுற்றுலா விடுமுறைப் பிரிவு மேலாளர் அமித் சுமனபாலா இந்த சலுகை சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், கோடை விடுமுறைக்கு இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அதிக அளவில் ஈர்க்கும் பொருட்டு சலுகைகள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பேக்கேஜ், 2 இரவு மற்றும் 3 பகல் கொண்டதாகும். விமான டிக்கெட், நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, உணவு ஆகியவை என்று எல்லாம் சேர்த்து குறைந்த கட்டணத்தில் இது வழங்கப்படுகிறது.
திருவனந்தபுரம், ஹைதராபாத், பெங்களூர் நகரங்களிலிருந்து வருவோருக்கான பேக்கேஜ் கட்டணம் ரூ.10,499 முதல் ரூ.10,999 வரையாகும். கொச்சினுக்கு ரூ.12,499, மும்பைக்கு ரூ.14,999 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் இனிமையான அனுபவங்களை தரும்.
தொழில் சார்ந்த சுற்றுலா தலமாகவும் இலங்கை உள்ளது. இந்தியா, கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த வியாபார அமைப்புகள் இலங்கைக்கு வருகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications