'மின்வெட்டால் கோவையில் பஞ்சாலைகள் மூடப்படும் அபாயம்'
சென்னை: மின்தட்டுப்பாடு, கச்சாப் பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணங்களால் கோவையில் 30 சதவீத பஞ்சாலைகள் மூடக்கூடிய அபாய நிலையில் இருப்பதாக அதிமுக எம்எல்ஏ வேலுச்சாமி தெரிவித்தார்.
சட்டசபையில் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன், தேசிய டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் உள்பட கோவையில் சிறியதும் பெரியதுமாக 3000 பஞ்சாலைகள் உள்ளன.
செயற்கையாக ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு, கச்சா பொருள்களின் கட்டுக்கடங்காத விலையேற்றம், வங்கி மானியம் கிடைக்காதது போன்ற காரணங்களால் தென்னிந்தியாவின் மான்செஸ்டராக விளங்கிய கோவை பஞ்சாலைகள், பனியன் தொழிற்சாலைகள், விசைத்தறிகள், பம்பு செட் தொழிற்சாலைகள் நலிவடைந்து வருகின்றன.
சில குறிப்பிட்ட தொழில்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க முடியும். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு முக்கியத்தவம் கொடுக்கும் அரசு ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளுக்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். புதிய தொழிற்சாலைகளுக்கு சுமார் 1000 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
விசைத்தறி நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் 3 முறை மின் கட்டணம் குறைக்கப்பட்டது. நவீன விசைத்தறிக்கான நாடா வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது. பல்லடத்தில் நவீன விசைத்தறி பூங்கா அமைக்க அதிமுக ஆட்சியில் ரூ.4.87 கோடி ஒதுக்கப்பட்டது.
திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள் ரூ.8000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை ஏற்றுமதி செய்தன. மின் தட்டுப்பாடு, டாலர் வீழ்ச்சி, மானியம் இல்லாத காரணங்களால் இப்போது ரூ.1500 கோடிக்கு கூட ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.