தா.கி. கொலை: அழகிரி-மன்னன் உள்பட 13 பேரும் விடுதலை
கடந்த 2002 மே 20ம் தேதியன்று மதுரை அண்ணாநகரில் வாக்கிங் போய்விட்டு திரும்பியபோது வீட்டு முன்பு திமுக மாஜி அமைச்சர் தா.கிருட்டிணன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, தற்போதைய மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உள்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த மதுரை செஷன்ஸ் நீதிபதி, திமுக அமைச்சர் ரகுபதியை சந்தித்ததாக எழுந்த புகாரையடுத்து வேறு கோர்ட் விசாரிக்குமாறு பரிந்துரை செய்தார்.
இந் நிலையில் தா.கிருட்டிணன் தம்பி ராமையா இந்த வழக்கு விசாரணையில் நீதி கிடைக்காது என்றும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து வழக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடந்தது. விசாரணையின்போது மு.க.அழகிரி, மன்னன் உள்ளிட்ட 13 பேரும் தினமும் சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
இந் நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையொட்டி மு.க அழகிரி உட்பட 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி துர்கா பிரசாத், அழகிரி, துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேர் மீதும் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கத் தவறி விட்டதால் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
இந்த தீர்ப்பையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தீர்ப்புக்குப் பின்னர் மு.க.அழகிரி கருத்து தெரிவிக்கையில், இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, நீதித்துறைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
இந்த வழக்கு ஒரு பொய் வழக்கு. அதிமுக அரசு என்னைப் பழிவாங்க தொடர்ந்த வழக்கு இது. அதிலிருந்து நான் விடுதலையாகிருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றார் அழகிரி.