'ஒண்டிக்கு ஒண்டி'- பிரபாகரனுக்கு ராஜபக்சே சவால்!!
கொழும்பு: என்னுடன் நேருக்கு நேர் சண்டை போட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தயாரா என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நூதன சவால் விடுத்துள்ளார்.
இலங்கையில் கிழக்கு மாகாண கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் தற்போது நடைபெற்று வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் என்ற இடத்தில் ஆளும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராஜபக்சே பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், அப்பாவி மக்களை விடுதலைப் புலிகள் கொன்று குவித்து வருகின்றனர். பிரபாகரன் இதைக் கைவிட வேண்டும். வேண்டுமானால் என்னுடன் நேருக்கு நேர் சண்டை போடட்டும். அதற்கு அவர் தயாரா?
கிழக்குப் பகுதியை தீவிரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து விட்டோம். இப்போது அங்கு தேர்தல் நடைபெறப் போகிறது. அதேபோல வடக்கையும் மீட்டு அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் வழங்குவோம்.
கிழக்கில் அமைதியில்லாமல் போனதற்கு யார் காரணம் என்பது அங்குள்ள மக்களுக்குத் தெரியும். அங்கு மசூதியில் தொழுகை நடத்திய 160 பேரை கொன்று குவித்தனர்.
அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளிலிருந்து அரசு ஒருபோதும் பின்வாங்காது என்றார் ராஜபக்சே.












Click it and Unblock the Notifications