கடலூரில் ஊருக்குள் புகுந்த கடல் நீர்-மக்கள் பீதி
கடலூர்: கடலூரில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் மீனவர்கள் உள்பட மக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர்.
தமிழக கடல் பகுதிகளில் வழக்கத்திற்கு விரோதமாக பல்வேறு இயற்கைச் சீற்றங்கள், கடல் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு மீனவர்களை வதைத்து வருகின்றன. அடிக்கடி கடல் கொந்தளிப்பு, அவ்வப்போது கடல் நீர் உள்வாங்குதல், ஊருக்குள் புகுதல் போன்றவை சகஜமான நிகழ்வுகளாகி விட்டன.
நர்கீஸ் புயலால் தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு நிலவி வந்தது. ராமேஸ்வரம், பாம்பன், கன்னியாகுமரி, கடலூர், நாகை, சென்னை ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருந்தது.
குறிப்பாக கடலூர் மாவட்டம் தேவானம்பட்டினம், எம்.ஜி.ஆர். திட்டு, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், தாழங்குடா, கடலூர் ஆகிய பகுதிகளில் கடல் அலைகள் ராட்சத அளவுக்கு எழுந்து மீனவர்களை மிரட்டி வந்தது.
ஆனால், நர்கீஸ் புயல் மியான்மரை நோக்கி போனதும் இந்த சீற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பியது.
இருப்பினும் நேற்று தேவனாம்பட்டினத்தில் திடீரென கடல் நீர் 30 மீட்டர் அளவுக்கு ஊருக்குள் புகுந்ததால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் பீதியடைந்தனர். பயந்து போய் ஓட்டம் பிடித்தனர்.
கடற்கரையில் மேடான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோடியம் ஆவி விளக்கின் கம்பம் உள்ள மண் பகுதி அரிக்கப்பட்டதால் மின் கம்பம் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் இப்பகுதி மீனவர்களிடையே பெரும் பீதியும், அச்சமும் நிலவுகிறது. மேலும் இப்பகுதி சுனாமிக்கு பெரும் சேதத்தை சந்தித்ததால் அதேபோன்ற பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் மீனவர்கள் மத்தியில் உள்ளது.