‘‘நான் அட்வகேட் வந்துருக்கேன்''.. எவ வேலு வீட்டிற்கு போன திமுக வக்கீல் சரவணனை விடாத போலீசார்
சென்னை: திமுகவின் முன்னாள் அமைச்சர் எவ வேலுவின் சென்னை வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் அங்கு சென்று எவ வேலுவிடம் பேச முயன்றார். ''சார்.. நான் அட்வகேட் சரவணன் வந்து இருக்கிறேன். அண்ணன் எவ வேலுவை பார்க்க வேண்டும்'' என்று கூறினார். அதற்கு அவர்கள் ''இப்போது முடியாது. நடைமுறை முடியட்டும் சார்.. அதன்பிறகு பேசுங்கள்'' என்று கூறினார். இதனால் வழக்கறிஞர் சரவணன் வீட்டுக்கு வெளியே காத்திருக்கும் நிலை உருவானது.
திமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருவண்ணாமலை சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவுமான எவ வேலு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் என்று மொத்தம் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எவ வேலுவின் சென்னை இல்லம், அலுவலகம் உள்பட மொத்தம் 14 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் எவ வேலு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது கடந்த 2022ம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக 'அறப்போர் இயக்கம்' ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷன் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்த நிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி எவ வேலுவின் சென்னை வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கதவுகளை மூடி போலீசார் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னையில் சோதனை நடக்கும் எவ வேலுவின் வீட்டிற்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் சென்றார். கதவு மூடப்பட்டு இருந்ததால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் அவர் கதவை திறந்து பார்த்துவிட்டு வெளியே நின்றார். கதவு திறக்கும் சத்தம் கேட்டு உள்ளே இருந்தவர்கள் கதவின் துளை வழியாக எட்டிப்பார்த்தனர்.
அப்போது, சரவணன், ''சார் நான் அட்வகேட்.. சரவணன்'' என்றார். அதற்கு அவர்கள், ''சார் நடைமுறைகள் முடிவடைந்த பிறகு பாருங்க'' என்றார். அதற்கு சரவணன், ''எப்போது முடியும். வேலு (எவ வேலு)அண்ணன் உள்ளே தான் இருக்கிறாரா.. அவருடன் யாரெல்லாம் இருக்கிறார்கள்?'' என்று வினவினார். அதற்கு அவர்கள், ''ஆமா அவர் (எவ வேலு) உள்ளே தான் இருக்கிறார். அவருடன் குடும்பத்தினர் இருக்கிறார்கள்''என்றார்.
இதையடுத்து எவ வேலு அண்ணனிடம் மட்டும் பேசிவிட்டு செல்லலாமா? என்று சரவணன் கேட்க, ''நடைமுறைகள் முடிவடைந்த பிறகு பேசுங்கள் சார்'' என்றார். அதற்கு சரவணன், ''அவர் கரெக்ட்டா இருக்கிறாரா?'' என்று பார்த்துவிட்டு போகிறேன் என்றார். அதற்கு அவர்கள், ''எதுவாக இருந்தாலும் நடைமுறை முடிந்த பிறகு பார்த்து கொள்ளுங்கள்'' என்றனர். இதையடுத்து வழக்கறிஞர் சரவணன் வீட்டுக்கு வெளியேயே காத்திருந்தார். அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.












Click it and Unblock the Notifications