“மோதிரம் கொடுத்தால் தமிழ்நாடு முன்னேறுமா?” விஜய்யின் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை கலாய்த்த ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ள 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. அரசு தரப்பில் இது தாய்மார்கள்-புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான நலத்திட்டமாக பாராட்டப்பட்டுக் கொண்டிருக்க, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இதை கடுமையாக விமர்சித்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, "இது மக்கள் வாழ்க்கையை மாற்றும் திட்டமல்ல; கவர்ச்சி திட்டம்" என்று அவர் வெளிப்படையாக கூறியிருப்பது, விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றப்படும் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவே 'தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்' பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ தொடக்க விழா செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டாலும், முதல்வர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கே இந்தத் திட்டம் பொருந்தும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ₹755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு தரப்பின் விளக்கப்படி, இது வெறும் 'மோதிரம் கொடுக்கும் திட்டம்' அல்ல; அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவங்களை ஊக்குவிப்பது, புதிய தாய்மார்களுக்கு மரியாதை அளிப்பது, பிறந்த குழந்தைக்கு குடும்பத்தின் முதல் பரிசு என்ற உணர்வை உருவாக்குவது போன்ற நோக்கங்களுடனும் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம்
"தாய் மாமன் சீர்" என்ற தமிழர் மரபை அரசுத் திட்டமாக மாற்றியிருக்கிறார் விஜய் என்றும் அவரது ஆதரவாளர்கள் பெருமையாகச் சொல்லி வருகின்றனர். ஆனால் இதையே இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முற்றிலும் வேறு கோணத்தில் பார்த்திருக்கிறார். சமீபத்திய பேட்டியில் அவர் பேசியபோது, "விஜய் ஒரு கவர்ச்சி நாயகன். அந்த கவர்ச்சியை பார்த்துதான் மக்கள் வாக்களித்து ஏமாந்திருக்கிறார்கள். இப்போ இந்த தங்க மோதிரம் திட்டமும் அதே மாதிரி கவர்ச்சி திட்டம் தான்" என்று கடுமையாக விமர்சித்தார்.
அதோடு அவர் நிற்கவில்லை. "முந்தைய ஆட்சியில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொடுத்தது மக்களுக்கு மாதம் மாதம் உதவியாயிருந்தது. இப்போ கொடுக்கிற மோதிரத்தை என்ன பண்ணப் போறாங்க? சேட்டு கடையில் அடகு வைத்து காசு வாங்குறதுக்குத்தான் உதவும். அதனால் தமிழ்நாடு முன்னேறப் போகுதா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தனின் இந்த கருத்து அங்கேயே நின்றுவிடவில்லை. "விஜய்க்கு நிர்வாகம் பற்றி தெரியாததற்கே இது ஒரு உதாரணம்" என்று அவர் சொன்னது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதற்குப் பிறகுதான் விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் கடும் எதிர்ப்புடன் களமிறங்கியுள்ளனர்.
"ஒரு திட்டத்தை விமர்சிக்கலாம்; ஆனால் குழந்தைக்கு தங்க மோதிரம் கொடுப்பதை கூட கிண்டல் செய்வது எந்த மனநிலை?" என்று சிலர் கேட்க, இன்னும் சிலர் "அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த குடும்பங்களுக்கு அது ஒரு நினைவுப்பொருளும் ஆதரவும்தான்" என்று ஜேம்ஸ் வசந்தனை எதிர்த்து பதிவுகள் போட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் கருத்து
முக்கியமாக, விஜய் ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதம் வேற மாதிரி இருக்கிறது. "இந்தத் திட்டம் ஒரு மோதிரம் பற்றியது மட்டும் இல்லை. அரசு மருத்துவமனையில் பிரசவத்தை ஊக்குவிக்கிறதா? மக்களுக்கு அரசின் ஆதரவு இருக்கிறது என்ற உணர்வை தருகிறதா? குடும்பத்துக்கு ஒரு சின்ன உதவியாக இருக்கிறதா? - இதையெல்லாம் பார்த்துதான் திட்டத்தை மதிப்பிடணும்" என்பதே அவர்களுடைய பதில்.
சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, "முந்தைய ஆட்சியில் பணம் கொடுத்ததை உதவி என்று சொன்னவர்கள், இப்போ மோதிரம் கொடுத்தால் கவர்ச்சி திட்டம் என்கிறார்கள்; பிரச்சனை திட்டத்திலா, விஜய்யிலா?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மறுபக்கம், ஜேம்ஸ் வசந்தனின் கருத்தை ஆதரிக்கும் தரப்பும் சமூக வலைதளங்களில் அமைதியாக இல்லை. "தமிழகத்திற்கு வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பெரிய மாற்றங்கள் தேவைப்படும் நேரத்தில், தங்க மோதிரம் மாதிரி திட்டங்கள் முன்னுரிமையா?" என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்கிறார்கள்.
மொத்தத்தில், "தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்" விஜய்க்கு அரசியல் பாயிண்ட் சேர்க்கும் திட்டமா, இல்லை ஜேம்ஸ் வசந்தன் சொல்வது போல வெறும் கவர்ச்சி திட்டமா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி - விஜய் அறிவித்த இந்த ஒரு திட்டம், பிறந்த குழந்தைகளுக்கான நலத்திட்டமாக தொடங்கியிருந்தாலும், இப்போது அது தமிழக அரசியலின் புதிய சண்டைத் தலைப்பாக மாறிவிட்டது.














Click it and Unblock the Notifications