87 பவுன் தங்கம்.. கன்னியாகுமரி ஓட்டலில் கள்ளக்காதல் ஜோடி.. 5 வருடம் தேடி சாதித்த ஒடிசா போலீஸ்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, தோவாளையில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி,அந்த மாநிலத்தில் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடத்திய தங்கநகை கொள்ளை சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சினிமா பாணியில் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி கடைசியாக கன்னியாகுமரியில் வந்து பிடித்துள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
ஒடிசா மாநிலம் மல்கான்கிரியில் 41 வயதாகும் சுபாஷ் ராஜாராம் பட்மல் என்பவர் அந்த பகுதியில் தனது வீட்டையொட்டி நகை கடை நடத்தி வருகிறார். தினமும் சுபாஷ் ராஜாராம் நகைக்கடையல் வியாபாரத்தை முடித்துவிட்டு, பிறகு இரவில் நகைகளை வீட்டு லாக்கரில் கொண்டு வந்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படித்தான் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி இரவு சுபாஷ் ராஜாராம் வழக்கம் போல் நகைகளை வீட்டு லாக்கரில் வைத்து விட்டு குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிந்தவர்கள் மீது மயக்க மருந்து தெளித்து விட்டு லாக்கரில் இருந்த 87.5 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்கள். மறுநாள் காலையில் சுபாஷ் ராஜாராம் கண்விழித்து பார்த்த போது லாக்கரில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு ஆடிப்போனார்.
இது குறித்து ஒடிசா மல்கான்கிரி காவல் நிலையத்தில் சுபாஷ் ராஜாராம் பட்மல் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். செல்போன் சிக்னல், சிசிடிவி காட்சிகள், அந்த பகுதி மக்களின் சாட்சியம் என பல்வேறு வகையில் விசாரித்தனர். இறுதியாக நடந்த விசாரணையில் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த மடசு ஜான் பால் என்ற ஜெகதீஷ் பால் (21), அவரது கள்ளக்காதலி இந்துாரி அருணா என்ற அர்ச்சனா (39) ஆகிய இருவரும் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து குற்றவாளிகளை செல்போன் சிக்னல் மூலம் போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சிக்கவே இலலை.. இந்நிலையில் தீவிரமான தேடுதல் வேட்டையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் போலீசாருக்கு அவர்கள் கன்னியாகுமரியில் இருப்பது தெரியவந்தது. ஐந்து வருடம் கழித்து செல்போன் மூலம் பேசியதால் சிக்கினார்கள்.
இதையடுத்து ஒடிசா மல்கான்கிரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபட் கடியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் மிஸ்ரா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர். அவர்கள் இங்கு தங்கி இருந்து துப்பு துலக்கினர். அப்போது ஜெகதீஷ் பாலும், அர்ச்சனாவும் தோவாளை 4 வழி சாலை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று ஒடிசா மாநில தனிப்படை போலீசார் அதிரடியாக ஓட்டலில் புகுந்து கள்ளக்காதல் ஜோடி இருவரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஆந்திராவில் ரூ.10 லட்சத்துக்கு விற்றதும், தற்போது நாகர்கோவில் வடசேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, தோவாளையில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. மேலும் நகைகளை விற்ற பணத்தை ஜாலியாக செலவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் ஒடிசா போலீசார் கைது செய்து பூதப்பாண்டி மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை ஒடிசாவுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.














Click it and Unblock the Notifications