அப்பாவை காணோம்.. தேடிய முதல்வர் விஜய்.. சபதம் எடுத்து ஆவேசமான திமுகவினர்
சென்னை: முதல்வர் விஜய், சட்டசபையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையை நிறைவு செய்யும் போது, 'எதிர்க்கட்சியினர் அவையில் இருந்திருந்தால் ஒரு 'ஆக்ஷன்' பண்ணணும் என தோன்றியது. எல்லோரும் போய்விட்டார்கள். உங்கள் (பேரவைத் தலைவர்) அனுமதியுடன் அதை பண்ணலாமா?' என கேட்டார். அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 'இப்பவும் பண்ணலாம் தப்பில்லை' என்றார்.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி தி.மு.க.-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்த அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கையை அசைத்து ஒரு சைகை காட்டியிருந்தார். இது அப்போது சமூக வலைதளங்களில் 'டிரெண்ட்' ஆனது. அதே சைகையைத்தான் முதல்வர் விஜய் சட்டசபையில் செய்து காண்பித்து தன்னுடைய உரையை நிறைவு செய்து இருக்கையில் அமர்ந்தார்.

அப்போது அப்பாவை காணோம் என்று கூறி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றதை கிண்டலும் செய்திருந்தார் முதல்வர் விஜய். இதை பார்த்த திமுகவினர் ஆவேசம் அடைந்துள்ளனர். கடுமையான எதிர்வினையாற்றி வருகிறார்கள். இடைத்தேர்தலில் ஸ்டாலினை நிற்க வைத்து மீண்டும் ஜெயிக்க வைத்த சட்டமன்றத்திற்கு அனுப்பியே தீருவோம் என்று சபதம் ஏற்று பதிவிட்டு வருகிறார்கள். பல திமுகவினர், ஸ்டாலின் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்று உள்ளே வர வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார்கள். அப்படித்தான் ஒரு நிர்வாகி பதிவிட்டுள்ளார்.
பி.எஸ்.பி.செல்வின் சதீஷ் குமார்.பிஇ என்ற திமுக நிர்வாகி வெளியிட்ட பதிவில் கூறுகையில், "கவர்ச்சி அரசியலால் இப்போது பெற்ற தோல்வியை விட மிக பெரிய தோல்வியை 1991-ல் பெற்றவர்கள் திமுகவினர். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே திமுக வென்றது. அத்தனை சோதனைகள் மத்தியிலும் அதில் வென்று வெற்றி கொடி நாட்டிய அந்த ஒரே நபர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மட்டுமே. அதற்காக திமுக ஒன்றும் சோர்ந்து போகவில்லை.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தானைத் தலைவர் கலைஞர் அவர்கள். திமுகவின் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத மன்றத்தில் ஆணவமும் , அகங்காரமும் தலைவிரித்து ஆடியது. கலைஞர் ராஜினாமா செய்த துறைமுகம் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எழும்பூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எதையும் சிங்க பார்வையில் எதிர்கொள்ளும் தானைத் தலைவர் கலைஞர் அவர்கள் அதையும் எதிர்கொள்ள தயாராக இருந்தார். திமுக சார்பில் எழும்பூர் தொகுதியில் பரிதி இளம் வழுதி அவர்களும் , துறைமுகம் தொகுதியில் செல்வராஜ் அவர்களும் போட்டியிட்டனர். நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
அந்த வெற்றி என்பது தமிழ்நாடு சட்டமன்றத்தையே திமுக அலரவிட்டது என்பதை யாரும் இன்றுவரை மறக்கமாட்டார்கள். அப்படியான வரலாறு கொண்ட திமுகவுக்கு இப்போது நடைபெறும் ஆட்சியின் அவலத்தை சுக்குநூறாக துடைத்தெறிய வேண்டிய நேரம் இதுவல்லவா ? சிறுமிகளின் பாலியல் வன்கொடுமை முதல் கொலை, போதைபொருள் , சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக மக்களிடம் பேச திராணி அற்றவன் , தோழியுடன் இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்க வேண்டுமா ? ஆம், வர போகிறது இடைத்தேர்தல்.
முதலமைச்சர் தேடிய அப்பாவை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டாமா ? கலைஞர் உரிமைத் தொகை , மகளிர் விடியல் பயணம் , நான் முதல்வன் , புதுமைப்பெண் திட்டங்களை வகுத்தவரை தற்குறி முதலமைச்சர் பார்க்க வேண்டாமா ? 1991 ஆண்டு இடைத்தேர்தல் வெற்றியை போல் , 2026 ஆண்டு இடைதேர்தலிலும் வெற்றி பெற்று தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு முகம் திமுக என்பதை மீண்டும் பதிவு செய்வோம்.
மீண்டு வருவோம் , மீண்டும் வருவோம். வணக்கம்..." இவ்வாறு கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications