ஆந்திர மருத்துவ மாணவி பிரிட்டனில் படுகொலை

விஜயவாடா, லம்பாடிப்பேட்டையைச் சேர்ந்த நாக சாய்பாபா மற்றும் நாகராஜகுமாரி தம்பதியினரின் மகள் ஜோதிர்மயி. இவர் இங்கிலாந்தின், பிர்மிங்ஹாமில் உள்ள உல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படித்து வந்தார்.
அங்குள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் அவரும், மேலும் இரு மாணவிகளும் தங்கியிருந்தனர். இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் ஜோதிர்மயி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அவருக்கு அருகில் ஒரு இளைஞர் மயக்க நிலையில் கிடந்தார்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று, ஜோதிர்மயியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கிக் கிடந்த இளைஞரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஜோதிர்மயியைக் கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. மயங்கிக் கிடந்த இளைஞர் உடல் நலம் தேறிய பின்னரே அவரிடம் விசாரிக்க முடியும்.
கொலை நடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டுக்கு ஆந்திராவைச் சேர்ந்த நான்கு மாணவ, மாணவியர் வந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விஜயவாடாவில் உள்ள விஜயா மருத்துவ அறிவியல் கழகத்தில் பிசியோதெரப்பியில் இளநிலைப் படிப்பை முடித்த ஜோதிர்மயி, 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் படிப்புக்காக லண்டன் சென்றார்.
ஜோதிர்மயியின் படுகொலை அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாணவி ஜோதிர்மயி, அவர் படித்து வந்த பல்கலைக்கழகத்திலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மரணம் சம்பவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு அருகில் மயங்கிய நிலையில் கிடந்தவரும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ஜோதிர்மயி கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த விவரங்கள் ரகசியமாக
வைக்கப்பட்டுள்ளன.
சமீபகாலமாக வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவ, மாணவியர் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாணவி படுகொலை செய்யப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications