இங்கிலாந்து விமான நிலைய தாக்குதல்-பெங்களூர் திரும்பினார் சபீல் அகமது
பெங்களூர்: இங்கிலாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தை தகர்க்க முயற்சித்து பலியான பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் கபீல் அகமதுவின் சகோதரர் சபீல் அகமத் இங்கிலாந்து சிறையிலிருந்து விடுதலையாகி இந்தியா திரும்பினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீப்பற்றி எரியும் ஜீப்பை ஓட்டிச் சென்று விமான நிலையத்தை தகர்க்க முயன்றார் கபீல் அகமது . இதில் அவர் கடும் தீக்காயம் அடைந்து பலியானார்.
இதையடுத்து அவருடன் தங்கியிருந்த சகோதரான டாக்டர் சபீல் அகமது கைது செய்யப்பட்டார்.
கிளாஸ்கோ விமான நிலையத்தை தகர்க்க கபீல் சதித் திட்டம் தீட்டியது பற்றி தெரிந்திருந்தும் அது பற்றி போலீசாரிடம் சபீல் தெரிவிக்கவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவருக்கு 14 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தண்டனை காலத்தை அவர் விசாரணையின்போதே சிறையில் கழித்துவிட்டதால் அவரை உடனே இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சபீல் அகமது நேற்றிரவு பெங்களூர் திரும்பினார்.