கொலை வழக்கில் விடுதலை- கண் கலங்கிய அழகிரி
சித்தூர்: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஜெயலலிதா அரசால் போடப்பட்ட (தா.கி. கொலை) வழக்கு, திமுக மீது தொடரப்பட்ட வழக்காகவே நான் கருதுகிறேன் என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் விடுதலையானவுடன் சித்தூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தைவிட்டு தொண்டர்கள் படைசூழ தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி வெளியேறினார்.
அப்போது அவரை மறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்கையில் அழகிரி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதா அரசால் போடப்பட்ட இந்த வழக்கை திமுக மீது போடப்பட்ட வழக்காகவே கருதுகிறேன். 13 பேரின் விடுதலைக்காக வாதாடிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்திய தண்டனை சட்டம் விதி 302 (கொலை செய்தல்) மற்றும் 120-பி (சதி செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அழகிரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் குற்றச்சாட்டுக்களை போலீசார் சரிவர நிரூபிக்கவில்லையென்பதால் இந்த வழக்கில் இருந்து அழகிரி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆங்கிலத்தில் இருந்த தீர்ப்பை நீதிபதி துர்காபிரசாத் சுருக்கமாக 5 நிமிடங்களில் அறிவித்துவிட்டு வெளியேறினார். தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சியில் அழகிரி கண் கலங்கினார். மற்றொரு குற்றவாளியான மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் அழுதுவிட்டார்.
அழகிரியின் உறவினர்களான முரசொலி அமிர்தம், மகள் கயல்விழி, மருமகன் வெங்கடேஷ், மகன் துரை தயாநிதி ஆகியோரும் நீதிமன்றம் வந்திருந்தனர்.
அழகிரி விடுதலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் நீதிமன்றத்துக்கு வெளியே இருந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர். இனிப்புகளை வழங்கினர்.












Click it and Unblock the Notifications