போதையில் கொடூரம்-தந்தையை கொன்ற மகள்கள்
திசையன்விளை: தினமும் குடித்துவிட்டு வந்து தங்களை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை மகள்களே உலக்கையால் அடித்தும் அரிவாள்களால் வெட்டியும் கொலை செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள ரம்மதபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி லியாகப்பன். கூலி வேலை செய்து வந்த இவருக்கு அந்தோணியம்மாள் என்ற மனைவியும், சகாய கனகா, சகாய சங்கீதா ஆகிய மகள்கள் உள்ளனர்.
இவர்கள் பீடி சுற்றும் வேலைகள் செய்து வந்தனர். அந்தோணி லியாகப்பன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியையும், மகள்களையும் அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அந்தோணி லியாகப்பன் வழக்கம் போல் குடித்து விட்டு வந்து மகள்களை அடித்து துன்புறுத்தினார்.
இதில் ஆத்திரமடைந்த அவரது மகள்கள், தந்தையை உலக்கையால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இதுகுறித்து அந்தோணியம்மாள் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.
எஸ்ஐ ஜீன்குமார் வழக்கு பதிவு செய்து சகாய கனகா, சகாய சங்கீதா இருவரையும் கைது செய்தார்.