தீயில் எரிந்த எஸ்எஸ்எல்சி விடை தாள்கள்-பரிகாரம் என்ன?
சென்னை: வேலூரில் எரிந்து போன எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் 2ம் தாள் விடைத் தாள்கள் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பது குறித்து தேர்வு முடிவுகள் வெளியாகும் தினத்தில் தெரிவிக்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறினார்.
அவர் கூறியதாவது:
வேலூரில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் மையத்தில் 12,804 ஆங்கிலம் 2ம் விடைத் தாள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 9,600 விடைத் தாள்கள் லேசாக சுற்றி வர கருகின. ஆனாலும் அவரை திருத்தும் நிலையில் இருந்தன. இதனால் அவை திருத்தப்பட்டு விட்டன.
மேலும் 2,342 விடைத் தாள்களில் எழுத்துக்கள் நன்றாக தெரிந்தன. எனவே அவையும் திருத்தப்பட்டு விட்டன.
தீயை அணைக்க தண்ணீர் பீய்ச்சியபோது 862 விடைத் தாள்கள் பாதிக்கப்பட்டன. அவற்றிலும் கூட 300 தாள்கள் திருத்தும் நிலையில் தான் உள்ளன.
மற்ற விடைத் தாள்கள் தான் எழுத்துக்களே தெரியாத அளவுக்கு அழிந்துள்ளன. இவற்றிற்கு விரைவில் பரிகாரம் தேடப்படும்.
இதற்கு என்ன பரிகாரம் என்பது பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று தெரிவிக்கப்படும்.
மே 31க்குள் எஸ்எஸ்எல்சி முடிவுகள்:
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 31ம் தேதிக்குள்ளோ அல்லது அதற்கு முன்னதாகவே வெளியிட ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.