பழனியில் பக்தர்களை நோகடிக்கும் போஸ்டர்கள்
பழனி: முருகன் கோயில் வீற்றிருக்கும் புனித ஸ்தலமான பழனியில் முகம்சுளிக்க வைக்கும் ஆபாசப்பட போஸ்டர்களால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் புகழ் பெற்ற பழனி முருகன் கோவில் உள்ளது. இந்த புனித ஸ்தலத்துக்கு வெளியூர்களில் இருந்தும் தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பழனி நகரில் உள்ள சில திரையரங்குகளில் ஆபாசப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த படத்தின் ஆபாசக்காட்சிகளை சித்தரிக்கும் போஸ்டர்கள் பழனி மலை முருகன் கோயில் அடிவாரத்திலும், நகரின் பெரும்பாலான முக்கிய இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. இதைப்பார்க்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மனம் நோகின்றனர்.
இது பற்றி பல முறை காவல் துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.