பொதுத்துறை பங்கு விற்பனை: மே 23ல் இடதுசாரிகள் ஆலோசனை
டெல்லி: லாபத்தில் இயங்கிவரும் 24 பொதுத்துறை நிறுவனங்களின் அரசு பங்குகளை விற்கும் மத்திய அரசு முடிவினால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து பரிசீலிக்க இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் வரும் 23ம் தேதி ஆலோசனை நடத்தவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.
டெல்லியில் கடந்த இரண்டுநாள்களாக நடந்துவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 31 வது தேசிய மாநாடு இன்று நிறைவடைந்தது. இதையடுத்து சிபிஐ பொதுச்செயலர் ஏ.பி.பரதன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
லாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்க முனைந்திருப்பது மிகவும் அபாயகரமான முடிவாகும்.
மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்துக்கு இது எதிரான செயலாகும். பொதுத்துறை பங்குகளை விற்கமாட்டோம் என்றும் அந்த நிறுவனத்தில் அரசுக்குள்ள பிடியை இன்னும் வலுப்படுத்தப்போவதாக தெளிவாக அளித்த வாக்குறுதிக்கு மாறான நடவடிக்கை இது.
ராஷ்ட்ரிய இஸ்பட் நிகாம் லிமிடெட், நியூக்ளியர் பவர் கார்பொரேஷன், இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்பொரேஷன், கோல் இந்தியா லிமிடெட், யுரேனியம் கார்பொரேஷன் மற்றும் கோவா, கொச்சின் கப்பல்கட்டுமான நிறுவனங்கள் போன்ற பெருமைமிக்க, லாபத்தை ஈட்டிவரும் 24 பொதுத்துறை நிறுவனங்களின் 5 முதல் 10 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்த பங்குகள் அரசாங்கத்துக்கு மிகவும் இன்றியமையாத, முக்கிய ஆதாரமானவை என்பதால் மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இந்த விற்பனை நடவடிக்கையை அரசு கைவிடவேண்டும். இது தொடர்பாக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முழு மூச்சுடன் எதிர்ப்போம்.
பொதுத்துறை நிறுவனங்களில் அரசாங்கத்தின் பங்குகளை குறைத்தால் நன்மை ஏற்படுவதாக நிதியமைச்சர் சிதம்பரம் கூறும் காரணங்களை ஏற்கமுடியாது. இந்த பங்குகளை விற்றால் அரசாங்கத்துக்கு தீங்காகத்தான் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
23ல் ஆலோசனை
அப்போது உடன் இருந்த கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், மத்திய அரசுக்கு இடது சாரிகள் அளித்துவரும் நிபந்தனையற்ற ஆதரவு எப்போதுமே நிலைத்திருக்கும் என்று அவர்கள் (மத்திய அரசு) கருதுகின்றனர் போலிருக்கிறது.
விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கு இடதுசாரிக் கட்சிகள் அளித்த பரிந்துரைகள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்தக்கோரி நாடுமுழுவதும் 1 கோடி பேரிடம் நடத்திய கையெழுத்து வேட்டை மனுவை லோக்சபா சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜியிடம் அளிக்கவுள்ளோம்.
இந்த நிலையில், இதுபோன்று நிபந்தனையற்ற ஆதரவை மத்திய அரசுக்கு அளித்திருப்பதில் அர்த்தமிருக்கிறதா என்பது குறித்து மற்ற இடதுசாரி முக்கியக் கட்சித் தலைவர்களுடன் வரும் 23ம் தேதி ஆலோசனை நடத்தப்படும்.
அதன்பிறகு முக்கிய முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications