அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு கலாம் ஆதரவு
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் கடந்த 1998ல் வாஜ்பாய் தலைமையிலான அரசு 2வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. இதில் பங்கு பெற்ற முக்கிய விஞ்ஞானிகளில முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் குறிப்பிடத்தக்கவர்.
இந்த குண்டுவெடிப்பு சோதனையின் 10வது ஆண்டு நிறைவு விழா மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. இதில் கலாம் பேசியதாவது:
எதிர்காலத்தில் இந்தியா அணுசக்தி மின்சாரத்தையே நம்பி இருக்க வேண்டியிருக்கும். இதற்கு நமக்கு யுரேனியம் தேவை. இந்த தேவையை பூர்த்தி செய்ய அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அவசியம்.
பொக்ரானில் 1974ல் முதல் அணுகுண்டு சோதனையையும் 1998ல் 2வது அணுகுண்டு சோதனையையும் வெற்றிகரமாக நடத்தினோம். பதவியேற்ற சில வாரங்களிலேயே வாஜ்பாய் துணிச்சலாக எடுத்த இந்த அணுகுண்டு சோதனை நடவடிக்கை பாராட்டுக்குரியது.
இந்திய வரலாற்றில் 1998 மே 11 ஒரு மறக்க முடியாத நாள்.
இவ்வாறு கலாம் பேசினார்.