ராணுவம் முகாமை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்
ஜம்மு: காஷ்மீர் மாநிலம் சம்பா பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவிய 7 பேரை பிடிக்க ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் காளிமாண்டி என்ற பகுதிக்குள் சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் 10 தீவிரவாதிகள் மே 11ம் தேதி நுழைந்தனர்.
அங்கு குடியிருந்த ஹோஷியர் சிங்-சேஷி தம்பதியரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து தீவிரவாதிகள் ஊடுருவல் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ராணுவத்தினர் விரைந்தனர். இந்நிலையில் பிஎஸ்எப் படை வீரர்களும் ராணுவத்தினருடன் சேர்ந்து தீவிரவாதிகளை தேடினர்.
அப்போது இந்திய வீரர்கள் மீது ஊடுருவல்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில் ஒரு பத்திரிகை போட்டோகிராபர், 2 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பிடிப்பதற்கு ராணுவத்தினர் முயற்சித்த நிலையில் இன்றும் சண்டை தொடர்ந்தது. இதில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
தொடர்ந்து சண்டை நடக்கிறது. இந்நிலையில் எஞ்சியுள்ள 7 பேரையும் பிடிப்பதற்கு ராணுவத்தினர் மும்முரமாக உள்ளனர். அவர்கள் சம்பா மற்றும் கத்துவா மாவட்டங்களில் தப்பியோடியிருக்கலாம் என்பதால் அந்த பகுதியில் ராணுவத்தினர் உச்சகட்ட உஷார் நிலையில் உள்ளனர்.
ஊடுருவல்காரர்கள் ராணுவக்குடியிருப்பை நோக்கி வர முயற்சித்ததாகவும், சம்பா பகுதியில் உள்ள ராணுவ முகாமை அவர்கள் குறிவைத்து வந்ததாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஏராளமான ஆயுதக்குவியல்களை சம்பா காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையி்ல் கடந்த மே 8ம் தேதியன்று இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ஊடுருவல்காரர்களை விரட்டியடித்ததாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்தது குறித்து ராணுவத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.