தேமுதிக கூட்டணிக்கு கட்சிகள் தூது- விஜயகாந்த்

கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம கோவையில் நேற்று நடந்தது.
இதில் விஜயகாந்த் பேசியதாவது: பிரதான கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணிகளை எதிர்த்து அரசியல் நடத்தும் ஒரே கட்சி தேமுதிகதான். திமுக, அதிமுக கட்சிகள் மீது ஊழல் கறைகள் படிந்துள்ளன. ஆனால் தேமுதிக மீது யாரும் குறை சொல்ல முடியாது.
தேமுதிக மற்ற கட்சிகளை விட வேகமாக வளரும் கட்சி. வளர வளர சிறு பூசல்கள் இருக்கத்தான் செய்யும். பிரச்னைகளை அவ்வபோது பேசி தீர்த்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கட்சிக்குள் ஏற்படும் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். பூசல்களுக்கு நிரந்தரமாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஒற்றுமையாக இருந்து மற்ற கட்சிகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
தமிழக அரசியலில் 14 கட்சிகளை ஒரே நேரத்தில் எதிர்க்கும் ஒரே கட்சி தேமுதிகதான். மற்ற கட்சிகளுடன் எந்த உறவும் வைத்துக் கொள்வதில்லை. எந்த சமூக பிரச்னை என்றாலும் அதில் நாம் முன்னின்று பிரச்னையை தீர்க்க பாடுபட வேண்டும். மாசுபடாத, சுத்தமான அரசியலை செய்ய நான் நினைக்கிறேன். அது முடியும் என்று நம்புகிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் தருவதாக ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி கூட்டணியினர் கூறுகின்றனர். சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில், ஆளுங்கட்சியுடன் சேர்ந்தாலும் 90 சதவீதம் வாக்குகள் கிடைக்கும், எதிர்கட்சியுடன் கூட்டு சேர்ந்தாலும் 90 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்றும் தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் 70 சதவீத வாக்குகளை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
கட்சி தொடங்கிய பின் ஒரு சட்டசபை தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆகியவற்றை சந்தித்துள்ளோம். தமிழகத்தில் நமக்கென்று ஒரு ஓட்டு வங்கி, அதுவும் தெளிவாக உள்ளது. அதை நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தி தேமுதிகவின் பலத்தை காட்ட வேண்டும் என்று கூறினார்.
மாநில அளவில் வந்த தேர்தல்களை தனித்து எதிர் கொண்ட விஜயகாந்த், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, தேசிய கட்சிகளுக்கு இணையாக பிற மாநிலங்களிலும் தேமுதிகவை பிரபலப்படுத்த விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாகவும், மாநிலத்தில் தனித்துப் போட்டி, மத்தியில் கூட்டணி என்ற கணக்கில்தான் விஜயகாந்த் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications