புதிய 'அக்னி-2' திட்டத்துக்கு முதல் பெண் தலைவி
அக்னி-2 ஏவுகணையின் மேம்படுத்திய புதிய ரகத்தை உற்பத்தி செய்யும் திட்டக்குழு தலைமை பொறுப்புக்கு டாக்டர் டெஸ்ஸி தாமஸ் என்ற பெண் விஞ்ஞானியை மத்திய அரசு நியமித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றிவந்த 200 பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் மத்தியில் விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2000 கி.மீ. தூரத்துக்கு அணு ஆயுதத்தைத் தாங்கிச் சென்று இலக்கைத் தாக்கக்கூடிய அக்னி-2 ரக ஏவுகணையை மேம்படுத்தும் பணியி்ல இந்த குழு ஈடுபடுகிறது.
5000 கி.மீ ஏவுகணை:
இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அக்னி-3 வெற்றியைத் தொடர்ந்து 5,000 கி.மீ. வரை பறந்து சென்று தாக்கும் ஏவுகணையை இந்தியா விரைவில் சோதனை செய்ய உள்ளது.
இந்திய தொழில்நுட்பத்தில் உருவான அக்னி-3 ஏவுகணை கடந்த 7ம் தேதி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 3000 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் ஆற்றல் படைத்த அக்னி-3 ஏவுகணையின் வெற்றி விஞ்ஞானிகளுக்கு உற்சாகத்தையும் தெம்பையும் கொடுத்துள்ளது. அக்னி-3 ரக ஏவுகணைகளை ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொள்ள உள்ளது. 5000 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக் கூடிய புதிய ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். திட்டப் பணிகள் முடியும் நிலையில் இருப்பதாகவும், அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் சோதனை செய்யப்படும் என்று அக்னி-3 திட்டத்தின் இயக்குனர் அவினாஷ் சந்தர் தெரிவித்தார்.
இந்த சோதனை வெற்றிப் பெற்றால், நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெறும்.