கண்டக்டரை செருப்பால் அடித்த கணவன் மனைவி கைது
திருத்துறைப்பூண்டி: ஒடும் பஸ்சில் சிகரெட் குடிப்பதை கண்டித்த கண்டக்டரை செருப்பால் அடித்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.
திருத்துறைபூண்டி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் அழகப்பன். நேற்று காலை திருத்துறைப்பூண்டியில் இருந்து தஞ்சைக்கு செல்லும் அரசு விரைவு பஸ்சில் பணியில் இருந்தார்.
பயணிகளுக்கு டிக்கட் கொடுத்துக் கொண்டு இருந்தபோது பஸ்சில் ஏறிய ரஜினி பிரியன் என்ற வாலிபர் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தார். இதை பார்த்த கண்டக்டர் அழகப்பன், பஸ்சில் சிகரெட் குடிக்கக் கூடாது என்று கூறினார்.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் ரஜினி பிரியன் தொடர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். கண்டக்டர் அவரை மீண்டும் கண்டித்தபோது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்போது ரஜினி பிரியன் திடீரென தனது காலில் இருந்த செருப்பை கழற்றி கண்டக்டர் அழகப்பனை சரமாரியாக அடித்தார். அவரது மனைவி பாப்பா ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அழகப்பனும் பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசில் அழகப்பன் புகார் செய்தார். இதையடுத்து ரஜினி பிரியன், அவரது மனைவி பாப்பாவை போலீசார் கைது செய்தனர்.