நாகரம்மனுக்கு 22 ஆண்டுக்குப்பின் கொழுக்கட்டை படையல்
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகரம்மன் கோயிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மனுக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபாடு நடந்தது.
குமரி மாவட்டம் இரணியல் அருகே ஒடுப்பாறையில் பிரசித்தி பெற்ற நாகர் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை மாதம் கடைசி ஞாயிறு, பௌர்ணமி ஆயில்ய நட்சத்திரம் கூடிவரும் நாளன்று கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பாகும்.
22 ஆண்டுகள் கழித்து கடந்த 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மேற்படி திதிகள் கூடிவந்தன. நீண்டகாலம் கழித்து இந்த நாள் வந்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகர் அம்மன் கோயிலுக்கு திரண்டு வந்திருந்தனர்.
ஏராளமான ஆண்கள் வாழை இலையில் சுற்றப்பட்டு பனை ஓலையில் பெரிய செங்கல் அளவுக்கு பிடிக்கப்பட்டிருந்த கொழுக்கட்டைகளை நெருப்பில் சுட்டு எடுத்தனர். பின்னர் அந்த கொழுக்கட்டைகளை அம்மனுக்கு படைத்தனர்.
கொழுக்கட்டைகள் மீது கோயில் பூசாரி புனித தீர்த்தம் தெளித்த பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications