கர்நாடகா 2வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது

கர்நாடக மாநிலத்தின் 2வது கட்டத் தேர்தல் வரும் 16ம் தேதி நடக்கிறது. ராய்ச்சூர், கொப்பல், வட கன்னடம், தென் கன்னடம், பெல்லாரி, சித்ரதுர்கா, தாவணகெரே, ஷிமோகா, உடுப்பி, சிக்மகளூர் ஆகிய 10 மாவட்டங்கள் அடங்கிய 66 தொகுதிகளுக்கு வரும் 16ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மங்களூர், கொப்பல் பகுதிகளில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சோனியா கலந்து கொண்டு பிரசாரம் நேற்று செய்தார். நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, அஸ்வின்குமார், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பாஜ வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 2 நாட்களாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். கட்சியின் மூத்த தலைவர் அத்வானி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். சுஷ்மா ஸ்வராஜூம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வெங்கய்யா நாயுடு, அனந்த குமார், அருண் ஜேட்லி ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலிவுட் முன்னணி ஸ்டார்களான தர்மேந்திரா, அவரது மனைவி ஹேமமாலினி ஆகியோரும் பிரசாரம் செய்தனர்.
மதசார்பற்ற ஜனதா தளம வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் தேவே கவுடா, குமாரசாமி ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் உத்திர பிரதேச முதல்வருமான மாயாவதி சித்ரதுர்காவில் நேற்று பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதைத் தொடர்ந்து வரும் 16ம் தேதி 66 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இந்த 66 தொகுதிகளில் காங்கிரசுக்கும் பாஜவுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications