பால்பண்ணை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய கிளார்க் கைது
தேனி: பால்பண்ணை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய தேனி மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் அலுவலக கிளார்க் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், வெங்கடாஜலபுரத்தில் பால்பண்ணை நடத்தி வருபவர் வெங்கடேசன். கடந்த 10ம் தேதி தேனி தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து உதவி ஆய்வாளர் நடராஜன், கிளார்க் சங்கரன் ஆகியோர் இவரது பண்ணையை ஆய்வு செய்ய வந்தனர்.
பண்ணையில் உள்ள மாடுகளுக்கு வழங்கும் தீவனத்தை எடை போடுவதற்காக இருந்த 300 கிலோ எடைப் போடக்கூடிய பெட்டி தராசை அதிகாரிகள் சோதனை செய்தனர். தராசு மற்றும் படிக்கல்களுக்கு 2005ம் ஆண்டுக்குக்குப் பிறகு முத்திரை இடப்படாமல் இருந்தது. இதுகுறித்து வெங்கடேசனிடம் விசாரித்தனர்.
தனது சொந்த உபயோகத்துக்கு வாங்கி வைத்துள்ளதால் முத்திரை இடவில்லை என்று வெங்கடேசன் தெரிவித்தார். அதற்கு, முத்திரை இடாமல் இருந்ததற்கு அபராதம் செலுத்த வேண்டி வரும் என்றும் அதை தவிர்க்க ரூ.2000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அலுவலர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து தன்னிடம் ரூ.1000 மட்டுமே இருப்பதாக கூறி வெங்கடேசன் அலுவலர்களிடம் கொடுத்துள்ளார். மீதி ரூ.600 மட்டுமே கொடுக்க முடியும், அதை அலுவலகத்துக்கு வந்து தருவதாக வெங்கடேசன் கூறினார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வெங்கடேசன் புகார் செய்தார்.
இதையடுத்து நேற்று காலை தேனி மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்துக்கு வெங்கடேசன் சென்றார். அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து கண்காணித்தனர். வெங்கடேசன் லஞ்ச பணம் ரூ.600ஐ கிளார்க் சங்கரனிடம் கொடுத்தார்.சங்கரன் லஞ்ச பணத்தை வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். உதவி ஆய்வாளர் நடராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி குலோத்துங்கன் தெரிவித்தார்