மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் வைக்க கமிட்டி எதிர்ப்பு-கார்த்திக்
மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் மத்திய கமிட்டி எதிர்ப்பு தெரிவித்ததாக அக்கட்சியின் மாநில தலைவர் கார்த்திக் கூறினார்.
விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மதுரையில் ஆர்பாட்டம் நடந்தது.
இதில் அக்கட்சியின் மாநில தலைவரும் நடிகருமான கார்த்திக் கலந்து கொண்டு பேசியதாவது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசியை உயர்த்தவா மக்கள் ஓட்டுபோட்டு தலைவர்களை தேர்ந்தெடுத்தார்கள்? விலைவாசி பிரச்னையில் மத்திய மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
ரூ.2க்கு அரிசி வழங்கினால் மட்டும் ஏழைகள் கஷ்டம் நீங்கிவிடாது. மற்ற பொருட்களின் விலையையும் குறைக்க வேண்டும். குறைகளை சுட்டிக்காட்டினால் அரசு அதை திருத்திக் கொள்ள வேண்டும்.
பதவி ஆசை மிகவும் கொடுமையானது. எனக்கு பதவி ஆசை கிடையாது. இந்த கட்சிக்கு தமிழக தலைவராக இருப்பது நான் செய்த பெரும் பாக்கியம். தற்போது இந்த கட்சி சுமார் 10 மாவட்டங்களில் தலை நிமிர்ந்து நிற்கிறது. சில சுயநலவாதிகள், சின்னபுத்திகாரர்கள் இந்த கட்சியை சீரழித்துவிட்டனர். அவர்களின் முகத்திரை விரைவில் கிழிக்கப்படும்.
ஜாதி மத கலவரங்களை தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். எங்களுக்கும் ஜாதி மோதல்கள் மீது நம்பிக்கை இல்லை. தேவர் சிலை தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகிறது. அதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தியாகிகள் என்ற பெயரில் தீவிரவாதிகள் உருவாகி வருகின்றனர். படித்துவிட்டு வேலையில்லாத இளைஞர்கள்தான் நக்சலைட்டுகளாக மாறிவருகின்றனர்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும். இந்த கருத்தை நான் மத்திய கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தபோது அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று கார்த்திக் பேசினார்.












Click it and Unblock the Notifications