காதலனுடன் ரயில்முன் பாய்ந்து இன்ஜி. மாணவி தற்கொலை
தஞ்சாவூர்: காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் ஓடும் ரயில்முன் காதலனுடன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை தோப்பு குளம் பகுதியை சேர்ந்த அறுமுகம் என்பவரின் மகன் கார்த்திக்(24). கார் டிரைவராக உள்ளார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக குடியிருப்பு அருகே குடியிருக்கும் லட்சுமி என்பவரது மகள் வாசுமதி(20). வாசுமதி தஞ்சையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியாக படித்து வந்தார்.
வாசுமதியின் தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இதனால் வாசுமதி தனது அம்மாவின் பராமரி்ப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக்கை வாசுமதி காதலித்துவந்தார்.
அடிக்கடி இருவரும் ஒன்றாக சுற்றிவருவதை அறிந்த லட்சுமி இந்த பொருந்த காதலை கண்டித்துள்ளார். தற்போது கல்லூரி தேர்வு நடந்துவரும் நிலையில் மீண்டும் கார்த்திக்குடன் வாசுமதி வெளியில் சுற்றுவதாக தகவல் அறிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளை லட்சுமி கண்டித்துள்ளார்.
இதனால் மனம் உடைந்து போன நிலையில் இருந்த வாசுமதி நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் நேற்று இரவு வாசுமதியும், கார்த்திக்கும் தஞ்சை எல்ஐசி காலனி அருகே ஓடும் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
ரயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி கார்த்திக் சட்டை பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையை வைத்து அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.